உண்மையைக் கண்டறிவதற்கான புதிய பொறிமுறை நாடளாவிய ரீதியிலான கலந்துரையாடல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளக நீதிப்பொறிமுறைகள் தற்போது அவசியமற்றவையாக மாறியிருப்பதுடன் அவை பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன.

எனவே பொறுப்புக்கூறல் சார்ந்த பொறிமுறைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துவதுடன் உண்மையைக் கண்டறிவதற்கான புதிய பொறிமுறை, நாடளாவிய ரீதியிலான விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்படவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் உபகட்டமைப்பான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பில் மீளாய்வு செய்யும் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானது.

அதன்படி இலங்கை தொடர்பான மீளாய்வு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மீளாய்வுக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி மனித உரிமைகள் அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான தமது அறிக்கைகளைச் சமர்த்துள்ளன.

அந்தவகையில், ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னிப்புச்சபையின் அறிக்கையில் அமைதிப்போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பயன்பாடு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அவை தொடர்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு –

பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கடந்த 2022 பெப்ரவரி மாதம் முதல் இலங்கை மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தப் போராட்டங்களை இராணுவ மயப்படுத்தப்பட்ட முறைமையின் ஊடாக அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பதையும், சில போராட்டங்களுக்கு எதிராக எவ்வாறு அநாவசியமானதும் மிகையானதுமான பாதுகாப்புப்படையினர் பயன்படுத்தப்பட்டனர் என்பதையும் நாம் ஆவணப்படுத்தியுள்ளோம்.

இருப்பினும் இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் தற்போதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அமைதிப்போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதற்கும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு இடமளிப்பதற்கும் அதிகாரிகள் தவறியிருக்கின்றார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு குறைந்தபட்சம் 3 சந்தர்ப்பங்களில் நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டதுடன் உரியவாறான செயன்முறைகள் மற்றும் நீதிமன்ற மேற்பார்வையின்றி நபர்களைக் கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்குமான மட்டுமீறிய அதிகாரங்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. அதன்படி அதிகாரிகளால் கடத்தல் பாணியிலான கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் 2022 ஓகஸ்ட் மாதம் போராட்டங்களுக்குத் தலைமைதாங்கிய இரு மாணவத ;தலைவர்களைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைப்பதற்கான உத்தரவு ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படைகளும் அற்றவையாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் போராட்டங்கள்மீதான அடக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருமாறும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அடுத்ததாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாக இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் உத்தரவாதமளித்திருப்பினும், அந்தச் சட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், ‘பயங்கரவாதம்’ என்பதற்கான உரிய வரைவிலக்கணம் இன்மை, நீண்டகால தடுப்புக்காவலில் வைக்கப்படல் உள்ளடங்கலாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்படும் முக்கிய குறைபாடுகள் அந்தத் திருத்தங்களின் ஊடாக நிவர்த்திசெய்யப்படவில்லை.

இந்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்யப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கும் அதேவேளை, புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

மூன்றாவதாக பிரகீத் எக்னெலிகொட வழக்கு, கடற்படையினரால் 11 பேர் கடத்தப்பட்ட வழக்கு, திருகோணமலை 5 மாணவர்கள் வழக்கு, ஜோசப் பரராஜசிங்கம் வழக்கு, லசந்த விக்ரமதுங்க வழக்கு உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் வழக்கு விசாரணைகள் முடக்கப்படுவது அல்லது தாமதிக்கப்படுவதானது குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மேலோங்குவதற்கு வழிவகுக்கும்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளக நீதிப்பொறிமு;றைகள் தற்போது அவசியமற்றவையாக மாறியிருப்பதுடன் அவை பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன. எனவே, பொறுப்புக்கூறல் சார்ந்த பொறிமுறைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை உண்மையைக் கண்டறியும் புதிய பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்துமேயானால், அது நாடளாவிய ரீதியிலான கலந்துரையாடல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவேண்டும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.