ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை இல்லாமல்செய்யும் செயற்பாட்டையே அரசு முன்னெடுக்கிறது – இரா.துரைரெட்னம்

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஜனநாயகத்தினை கேள்விக்குட்படுத்தி அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை இல்லாமல்செய்யும் செயற்பாட்டையே அரசு முன்னெடுப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் உபதலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் ச்நதிப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவு, கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட விவசாயக் காணிகளில் குறிப்பாகத் 90000 த்திற்கும் மேற்பட்ட வேளாண்மை மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக் காணிகளில் அந்தப் பிரதேச விவசாயிகள் பல்லாண்டுகாலம் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள மகாவலித் திணைக்களமும், வனவிலாகாத் திணைக்களமும் மற்றும் காட்டு இலாகாத் திணைக்களமும் சேர்ந்து இவ்விவசாயிகள் பயன்படுத்தி வருகின்ற காணிகளை ஏதோ ஒரு வகையில் அந்த விவசாயிகளுக்கு வழங்காமல் தடுத்து நிறுத்தக் கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடந்த மாதம் மகாவலித் திணைக்களம் அந்த விவசாயிகளுக்குரிய காணிகளை நில அளவை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை, கிரான் மற்றும் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள காணிகளை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்குச் சார்பான அமைச்சர்களிடம் நாம் வினயமாகக் கேட்கிறோம்.

எம்மைப் பொறுத்தவரையில் குறிப்பாகப் பட்டிப்பளை,  வவுணதீவு, செங்கலடி, கிரான் மற்றும் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அண்ணளவாக 1 இலட்சத்து 75000 த்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் அப்பகுதிகளில் உள்ளன.
இப்பகுதிகளிலுள்ள காணிகளை இக்கால்நடை வளர்ப்பிற்காக ஒதுக்கிக் கொடுப்பதற்கு 2011, 2012  ஆம் ஆண்டுகளில் அந்தந்தப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கிட்டத்தட்ட பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் நிலஅளவை செய்து கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் விவசாயிகளுக்கெனப் பல விஷேட திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் வரவேற்கக் கூடிய திட்டங்களாக இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விவசாயிகளுக்கு உள்ளீடுகள் உரிய காலத்துக்குக் கிடைப்பதில்லை.
இதன்காரணமாக பல்வேறு மோசடிகள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை இலங்கையிலுள்ள வேறு மாவட்டங்களுக்கு உரிய வேளைக்கு இவை வழங்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் வடக்குக் கிழக்கைப் பொறுத்த வரையில் நீண்ட காலமாக ஜனநாயகம் முழுமையாக அமுல்படுத்தப்படுகின்றதா? என்ற கேள்வி 30, 40 வருடங்களாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மக்களைப் பொறுத்தவரையில் வாக்களிப்பினூடாக தங்களது சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்குரிய ஆணையை வட- கிழக்கிலுள்ள சிறுபான்மையின மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.சமூதாயத்தில் தலைமைத்துவம் வழங்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்குண்டு.

அந்த வகையில் உள்ளூராட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெற வேண்டும். நடைபெறும் போது வட- கிழக்கு மக்கள் தாம் விருமபியவரைத் தெரிவு செய்ய வகை ஏற்படுத்த வேண்டுமென்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.