தடைகளை மீறி மீண்டும் பத்மநாபாவுக்கு சிலை எழுப்பும் பணிகள் வேகமாக முன்னெடுப்பு

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தடையையும் மீறி வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அருகாமையில் பத்மநாபாக்கு சிலை அமைக்கும் செயற்பாடுகள் இன்று (11) துரித கதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அருகாமையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் தந்தை செல்வாவின் சிலைக்கு அருகில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபாவுக்கு சிலை அமைக்கும் செயற்பாடு நகர சபையின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமது திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியினை பெற்றுக்கொள்ளாமல் சிலை அமைப்பதற்கான நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருவதால் அப்பணிகளை உடனடியாக இடைநிறுத்தி உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளரால் வவுனியா நகர சபைக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இக்கடிதத்தின் பிரதிகள் வவுனியா பிரதி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் வவுனியா பொலிஸ் நிலையம் உட்பட சில திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சில நாட்களாக சிலை அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டு,  இன்று குறித்த கட்டுமானப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இக்கட்டுமான பணிகளை நிறுத்துமாறு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை நாட்டின் அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் ஆயுட்காலம் எதிர்வரும் 19ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.