மக்களுக்கு ஏற்படப்போகும் தலைவிதியை நினைத்து கவலையடைகின்றாராம் சஜித்!
வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் மக்களுக்கு ஏற்படப்போகும் தலைவிதியை நினைத்து கவலையடைகிறேன் செல்வந்தர்களை மாத்திரம் போஷிக்கும் வரவு செலவு திட்டமாகவே காணுகிறோம் என எதிர்க்கட்சித் தலைரவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் இறுதி வாக்கெடுப்புக்கு பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
அரசாங்கம் அடுத்த வருடத்துக்காக நிறைவேற்றிக்கொண்டுள்ள வரவு செலவு திட்டத்தில் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
இதனால் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு ஏற்படப்போகும் தலைவிதியை நினைத்து கவலையடைகிறேன். வரவு – செலவு திட்டத்தில் சமூகத்தில் எந்தத் தரப்புக்கும் எந்த நன்மையும் கிட்டாத நிலையில் செல்வந்தர்களை மாத்திரம் மேலும் போஷிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
சாதாரண மக்களைப் புறக்கணித்து பெரும் செல்வந்தர்களை போஷிக்கும் வரவு – செலவுத் திட்டம் மூலம் சமூகத்தில் எந்தத் தரப்புக்கும் எந்த நன்மையும் கிட்டவில்லை. இதனை மிகவும் கீழ்தரமான வரவு -செலவு திட்டம் எனத் தெரிவிக்கலாம்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இன்னும் 8 தவணைகளைப் பெறவேண்டும். தற்போது இரண்டாவது தவணை கிடைக்க இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவியை பெற்றுக்கொள்ளவே மக்களின் மது பாரிய வரிசுமையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, இரண்டாம் தவணை கிடைத்தமைக்காக ஆரவாரப்பட்டு கொண்டாடக் கூடாது.
அத்துடன் ஊழலை எதிர்க்கும், ஊழலை இல்லாதொழிக்க முன்நிற்கும் நல்லாட்சிக்காகத் தயாராகும் எந்தவொரு நபருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்தே இருக்கும்.
ரொஷான் ரணசிங்கவுக்கு இருந்த அனைத்து அமைச்சுப் பதவிகளையும் சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் மறந்து ஒரு கொள்கை ரீதியான முடிவை அணுகியே வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தார் என்றே நினைக்கிறேன்.
அவரின் இந்த நடவடிக்கை சீரழிந்து வரும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து,புதிய பிரவேசத்தின் தொடக்கமாக இருக்கலாம். – என்றார்
கருத்துக்களேதுமில்லை