ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதற்கான புதிய முறைமை

ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்குடனும் மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையிலும் அரசால் அவ்வப்போது ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது.

அத்தகைய சந்தர்ப்பங்களில் ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகளாவனவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் ஒன்றுகூடுவது கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்துக்குப் பெரும் தடையாகும்.

எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவால் ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமை அலுவலகம், மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம், தொகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களின் ஊடாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.

மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரும் 50 ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்கள் பொலிஸ் தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும்.

மேல் மாகாணம் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் கீழ் வரும் 50 ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்கள் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தால் வழங்கப்படும்.

மேல் மாகாணம் தவிர்ந்த மாகாணங்களில் உள்ள 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தால் வழங்கப்படும்.

அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் கீழ் உள்ள 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட மற்றும் 50 இற்கும் குறைவான ஊழியர் எண்ணிக்கையைக் கொண்ட நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி அலுவலகத்தால் வழங்கப்படும்.

பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திலுள்ள 10 இற்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அனுமதி அந்தந்தப் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே விசேட மனிதாபிமான காரணங்களின் அடிப்படையில் ஆட்களுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்குப் பொலிஸ் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்களை எந்த அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதை ஏலவே உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார். அனுமதிப்பத்திரங்களுக்கு மிகவும் நியாயமான காரணத்துடன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், அதிகார சபைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்குத் தமது தொழில் அடையாள அட்டையை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த முடியும். எனினும், தொழில் நிமிர்த்தமின்றி தமது ஊழியர் அடையாள அட்டையை துஷ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் புதிய முறைமை உள்ளிட்ட சுற்றுநிரூபத்தை www.police.lk என்ற இணையத்தளத்திலும் அரச தகவல் திணைக்கள இணையத்தளத்திலும் பார்வையிட முடியும எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.